லே அவுட் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் மனு

கோவை அருகே லே அவுட் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-01-29 08:56 GMT

மனு அளிக்க வந்த விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

கோவை சீரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இவரது விவசாய பூமிக்கு அருகில் செந்தூர் எலைட் டெவலப்பர்ஸ் என்ற பெயரில் வீடுகள் கட்டி விற்பனை செய்யும் லேட் அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லே அவுட் காரணத்தினால் மழைக்காலங்களில் வரும் மழைநீர் போதிய வடிகால் வசதி கட்டமைப்பு இல்லாமலும், பொதுமக்களால் வெளியேற்றப்படும் கழிவு நீர், குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் போன்றவை நேரடியாக பழனிச்சாமியின் விவசாய பூமிக்குள் வந்து சேர்வதாகவும் கூறப்படுகிறது.

இதனால் விளை நிலங்கள் மாசடைவதாகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்த பொழுதும் முறையான நடவடிக்கை இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த லே அவுட் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் பழனிசாமி வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

மேலும் லே-அவுட் அமைத்த நபர்களோடு கைகோர்த்துக் கொண்டு சீரபாளையம் ஊராட்சி செயலாளர் செயல்பட்டு வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ள அவர்கள், அந்த மனைப் பிரிவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்து செயல்படும் ஊராட்சி செயலாளரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பதாகைகளை ஏந்தி அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

Tags:    

Similar News