கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை

போலீசார் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கை முறிவு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார்.

Update: 2024-05-09 09:00 GMT

சவுக்கு சங்கர்

காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கோவை மத்திய சிறையில் போலீசார் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கை முறிவு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு சிகிச்சைக்காக உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் உள்ள யூ டியுபர் சவுக்கு சங்கரை காவல் துறையினர் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த சவுக்கு சங்கருக்கு வீல் சேரில் அமர்ந்து அழைத்துச் செல்ல செவிலியர்கள் அறிவுறுத்திய போது, நான் நடந்து வருகிறேன் என தெரிவித்துக்கொண்டு மருத்துவமனை வளாகத்திற்குள் சென்றார். வலது கையில் முறிவு ஏற்பட்டதா? எந்த மாதிரி காயம் உள்ளது? என முதலில் அவருக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே செய்யப்பட்டது.

இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் ஐந்து நாட்கள் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இதனிடையே தேனி காவல் துறையினர் கஞ்சா வழக்கிலும், பெண் காவலர்களை இழிவாக பேசிய வழக்கில் திருச்சி மாநகர காவல் துறையினரும், பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் அளித்த வழக்கிலும், தமிழர் முன்னேற்ற படையைச் சேர்ந்த வீரலட்சுமி அளித்த வழக்கிலும் சென்னை காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இந்த வழக்குகளில் கைது செய்ததற்கான உத்தரவினை போலீசார் சவுக்கு சங்கரிடம் வழங்கினர். இதுவரை ஐந்து வழக்குகளில் யூ டியுபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News