கோவையில் பூக்கடைக்காரர் கொலை! தங்கையின் கணவர் தப்பி ஓட்டம்!

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சண்முகம் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சீனிவாசனை சரமாரியாக குத்தினார்.

Update: 2024-06-10 13:45 GMT

காவல் நிலையம்

கோவை கவுண்டம்பாளையம் ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (42). இவர் டவுன்ஹால் பகுதியில் பூக்கடை நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீனிவாசன் தனது தங்கை கணவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (55) என்பவரிடம் 3.5 சென்ட் நில பத்திரத்தை வாங்கி அடகு வைத்து ஜவுளிக் கடை துவங்கினார். அதில் போதிய வருமானம் இல்லாததால் அதனை மூடிவிட்டார்.

அதன் பிறகு சீனிவாசன் பூக்கடை நடத்தி வந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு வருமானம் இல்லாததால் அவரால் தங்கை கணவரின் நில பத்திரத்தை மீட்க முடியவில்லை. இதுதொடர்பாக அடிக்கடி சீனிவாசனுக்கும், சண்முகத்துக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், சண்முகம், நேற்று சீனிவாசன் வீட்டுக்கு சென்றார். வீட்டு முன்பு நின்று இருந்த சீனிவாசனிடம் தனது நில பத்திரத்தை உடனே மீட்டு தரும்படி கேட்டார்.

இதில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சண்முகம் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சீனிவாசனை சரமாரியாக குத்தினார். சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த உறவினர்கள் சண்முகத்தை பிடிக்க முயன்றார்.

ஆனால் அவர் அங்கு இருந்து தப்பிச் சென்றார். இடது பக்க மார்பில் கத்தி குத்து விழுந்ததில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசார் சண்முகம் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News