திமுக அலுவலகத்தில் தொமுச நிர்வாகி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி

போக்குவரத்து தொழிற் சங்கத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்

Update: 2024-03-06 13:30 GMT

தற்கொலை முயற்சி

கோவை வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் கோவை, நீலகிரி மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் இருக்கக்கூடிய போக்குவரத்து ஊழியர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் சங்கம், மின்சார ஊழியர் சங்கம், ஆட்டோ சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து நிர்வாகிகளிடம் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தொமுச போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அங்கிருந்த திமுக தொண்டர்கள் உடனடியாக அவரை மீட்டனர்.

தொமுச நிர்வாக்கள் சிலர் சங்க பிரச்சினை காரணமாக தனக்கு பணிமாறுதல் செய்து இருப்பதாகவும், தொழிற்சங்கத்திற்குள் இருக்கக்கூடிய பிரச்சனை காரணமாகவே அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து தன்னை வேறு இடத்துக்கு மாறுதல் செய்ய வைத்திருப்பதாகவும், திமுக நிர்வாகிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். தொமுச போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரமேஸ்வரன் அப்போது தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை முயற்சி சம்பவம் காரணமாக திமுக அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

Similar News