தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

உப்பிலிபாளைம் பகுதியில் தண்டு மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

Update: 2024-04-24 05:30 GMT

நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்

கோவை - அவிநாசி சாலையில் உள்ள உப்பிலிபாளைம் பகுதியில் தண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன்களை செலுத்துவது வழக்கம்.

இந்தாண்டு தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 16 - ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது.

இதைத் தொடர்ந்து இன்று நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வு இன்று துவங்கியது. இதில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் அக்னிச் சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

டவுன்ஹால் பகுதியில் உள்ள கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக டவுன் ஹால், ஒப்பனைக்கார வீதி, லிங்கப்பசெட்டி வீதி,பால் மார்கெட், புரூக் பாண்டு ரோடு, நஞ்சப்பா ரோடு வழியாக தண்டு மாரியம்மன் கோவில் வந்து அடைந்தது.

தண்டு மாரியம்மன் கோவில் ஊர்வலத்தில் பாதுகாப்பு பணிக்காக 200 - க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் வழிபாடு நடத்தி சென்றனர்.

Tags:    

Similar News