கோடநாடு வழக்கு தொடர்பாக மனோஜ் சாமியிடம் சிபிசிஐடி விசாரணை

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் முன்பு மனோஜ் சாமி விசாரணைக்கு ஆஜரானார்.

Update: 2024-02-15 06:00 GMT

மனோஜ் சாமி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது.

இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி விசாரணை மாற்றப்பட்ட நிலையில், ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள், செல்போன் தரவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயனிடம் கடந்த 1 ம் தேதி சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் திருச்சியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் செல்போன் உரையாடல்கள் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதனிடையே இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மனோஜ் சாமியை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதன் பேரில் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் முன்பு மனோஜ் சாமி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாகவும், செல்போன் உரையாடல்கள் தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News