சாரைபாம்பை பிடித்து வீடியோ வெளியிட்ட பெண் : வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர்..!

பாம்பை அனுமதியின்றி இன்றி பிடித்து செல்போனில் வீடியோ எடுத்து துன்புறுத்தியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-05-28 07:30 GMT

பாம்பை பிடித்த பெண் மீது வழக்குப்பதிவு

கோவையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடும் பணிகளில் தன்னார்வ அமைப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை புலியகுளம் பகுதியில் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒரு வீட்டில் இருந்துள்ளது.

இது தொடர்பாக கிடைக்கபெற்ற தகவலின் பேரில் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினரான அப்துல் ரஹ்மான் மற்றும் சின்னவேடம்பட்டியை சேர்ந்த உமா ஆகியோர் அந்த பாம்பை பிடித்தனர். இதனை கோவை வனச்சரக அலுவலர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

இதனிடையே சாரை பாம்பை பிடித்த போது சாரை பாம்புகள் விஷமற்றவை. அவற்றால் மனிதர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை எனவும், பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என்ற விழிப்புணர்வு வீடியோவை அவர்கள் இருவரும் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அது வைரலானது.

இந்த நிலையில் பாம்பை மீட்ட அப்துல் ரஹ்மான் மற்றும் உமா மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனுமதியின்றி  பிடித்து செல்போனில் வீடியோ எடுத்து துன்புறுத்தியதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் வனத்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்கு பின்னர் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடித்த தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினரான இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து கோவை மாவட்ட வனப்பாதுகாவலரிடம் கேட்ட போது இதுபோன்று மற்றவர்கள் ஈடுபடக்கூடாது எனவும், நல்லெண்ண அடிப்படையில் இருவரும் செயல்பட்டதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்தார். வீடியோ சமூக ஊடங்களில் வைரல் ஆனது தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News