ஆபாச படம் பார்ப்பவர்களை குறிவைத்து நூதன முறையில் மோசடி செய்த 9 பேர் கைது

காவலர்கள் போல நடித்து பல்வேறு இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Update: 2024-01-14 11:15 GMT

கைது செய்யப்பட்டவர்கள்

கோவை மருதமலை பகுதியைச் சேர்ந்தவர் சபரி. 23 வயதான இவர் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து, செல்போனில் ஆபாச படங்களை பார்க்கும் இளைஞர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் சில இளைஞர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் ஆபாச படங்கள் பார்த்துள்ளீர்கள் எனவும், உங்கள் மீது நடமாடும் நீதிமன்றம் மூலம் மீது வழக்கு புனையப்பட உள்ளது எனவும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்களிடம் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். மேலும் செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது காவல் துறையினர் பயன்படுத்தும் வாக்கி டாக்கி ஒலியையும் எழுப்பி உள்ளார். இதனை உண்மை என நம்பிய இளைஞர்கள் சபரி கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளனர். இந்த முறையை பயன்படுத்தி கொண்டு சபரி மற்றும் அவரது சக நண்பர்கள் பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பணத்தை கொடுத்து பாதிக்கப்பட்ட சில இளைஞர்கள் சபரியின் குழு மீது சந்தேகமடைந்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் சபரி(23),  ஜப்பான் (எ) ஆலன்(18), கிச்சா(எ) கிஷோர்குமார் (18),  சின்னபகவதி (எ) பிரிவின் மோசஸ்(20),  வெய்ட்டி(எ) அபிஷேக் குமார்(20),  வடக்கு(எ) தனுஷ்குமார்(20) , தோனி(எ) பிரவீன் குமார்(20), அப்பு(எ) அகஸ்டின் (20) மற்றும் மனோஜ்(19) ஆகிய 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீதிமன்ற காவலில் 9 பேரையும் சிறையில் அடைத்தனர். காவலர்கள் போல நடித்து ஆபாச படம் பார்த்த இளைஞர்களிடம் இலட்சக்கணக்கில் மோசடி செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News