40,000க்கு 4 லட்சம் அனுப்பிய தொழிலதிபர்: தலைமறைவான வட மாநில தொழிலாளர்கள்

சம்பளம் போடும் போது, 40 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக தவறுதலாக 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை அனுப்பி உள்ளார்.

Update: 2024-03-04 13:45 GMT

புகார் அளிக்க வந்த பாஸ்கரன்.

கோவை கணபதி பகுதியில் கட்டுமான அலுவலகம் வைத்திருப்பவர் பாஸ்கரன். இவரது நிறுவனத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சிவம் நாயக், பிரபாகரன் நாயக் ஆகிய இருவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கரன் கடந்த மாதம் சம்பளம் போடும் போது, 40 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக தவறுதலாக 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை சிவம் நாயக் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் உடனடியாக தவறுதலாக பணம் அனுப்பியதை உணர்ந்த பாஸ்கரன், சிவம் நாயக்கை அழைத்து அந்த பணத்தை திங்கட்கிழமை வந்து வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி இருக்கிறார்.

இந்நிலையில் இன்று காலை அவர் சைட்டிற்கு சென்று பார்த்த போது, சைட்டில் அவர்களை காணவில்லை. பின்னர் இது குறித்து விசாரித்த போது நேற்று இரவே அவர்கள் அவர்களது ஊருக்கு புறப்பட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பாஸ்கரன் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து சிவம் நாயக்கின் வங்கி கணக்கை காவல் துறையினர் முடக்கினர். மேலும் அந்த வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் ஏற்கனவே ஒரு லட்சத்தை அவர்கள் எடுத்து விட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து சைபர் க்ரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பாஸ்கரன் கூறுகையில், இத்தனை நாட்களாக வேலை செய்துவிட்டு துரோகம் இளைத்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், தன்னால் அந்த நம்பிக்கை துரோகத்தை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என வேதனை தெரிவித்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இழந்த பணத்தை மீட்டு தர வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags:    

Similar News