வாடகைக்கு வீடு எடுத்து கோவில் திருவிழாவில் நகை திருடிய 3 பெண்கள் கைது

Coimbatore News- பல பெண்களிடம் நகை பறித்த 3 பெண்களை கைது செய்த போலீசார், 20 பவுன் நகைகளை காவல் துறையினர் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

Update: 2024-02-24 14:15 GMT

Coimbatore News- கைது செய்யப்பட்டவர்கள்

Coimbatore News, Coimbatore News Today- கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில், கோவையின் காவல் தெய்வமாக கருதப்படுகிறது. இந்தாண்டு கோனியம்மன் கோவில் தேர் திருவிழா வருகின்ற பிப்ரவரி 28 ம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில் கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி தெற்கு பகுதி துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் தனிப்படை காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக உக்கடம், பெரிய கடை வீதி, டவுன்ஹால், கோனியம்மன் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் தனிப்படை காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற 3 பெண்களை பிடித்து தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தி தோப்பு பகுதியை சேர்ந்த பார்வதி (35), கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த முத்துமாரி (28), மதுரையை சேர்ந்த ஆர்த்தி (26) என்பதும், அவர்கள் பேரூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை குறிவைத்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட இருந்ததும் தெரியவந்தது. இதேபோல கடந்த ஒரு வாரத்தில் பல பெண்களிடம் நகை பறித்தது தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News