பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக 70 லட்சம் மோசடி செய்த ஆசிரியை கைது
திருவண்ணாமலையில் பணத்தை இரட்டிப்பாகி தருவதாக 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆசிரியை கைது செய்யப்பட்டார்
HIGHLIGHTS
![பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக 70 லட்சம் மோசடி செய்த ஆசிரியை கைது பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக 70 லட்சம் மோசடி செய்த ஆசிரியை கைது](https://www.nativenews.in/h-upload/2024/05/26/1908138-arest.webp)
70 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆசிரியை கைது (மாதிரி படம்)
திருவண்ணாமலையில் அருகே ஏல சீட்டு நடத்தி ரூபாய் 70 லட்சத்தை மோசடி செய்ததாக அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் சு.ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். மனைவி உண்ணாமலை. இவர் இசுக்காழி காட்டேரி அரசு பள்ளியில் நடுநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். செல்வம் ராணுவத்தில் வேலை செய்வது வருவதாகவும் கூறப்படுகிறது.
கணவன் மனைவி இருவரும் திருவண்ணாமலையை சுற்றியுள்ள 20 க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்தவர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இதில் 200 க்கும் அதிகமானவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களிடமிருந்து மாதம் தோறும் ரூபாய் 1000, 1200 என பணத்தை வசூலித்துள்ளனர்.
அதில் அப்பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உண்ணாமலையிடம் ரூபாய் 1 லட்சத்திற்கான ஏல சீட்டில் இணைந்து கடந்த ஜனவரி மாதம் வரை 13 தவணைகளாக ரூபாய் 46,125 செலுத்தியுள்ளார். மேலும் மணிவண்ணன் தனது மகன் பெயரிலும் ரூபாய் 1 லட்சம் ஏலச்சீட்டை 13 தவணைகளில் ரூபாய் 46,125 செலுத்தியுள்ளார். மேலும் மணிவண்ணன் ரூபாய் 2 லட்சத்திற்கான சீட்டிற்காக தலா 6 தவணைத் தொகையை செலுத்தி வந்துள்ளார். ஆக மொத்தம் மணிவண்ணன் ஏலச்சீட்டு தொகையாக ரூபாய் 1 லட்சத்து 78 ஆயிரத்து 750 ஐ ஆசிரியை உண்ணாமலையிடம் ரொக்கமாக கொடுத்து வந்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக உண்ணாமலையும் அவரது கணவர் செல்வமும் மணிவண்ணனை தொடர்பு கொண்டு தாங்கள் பல தொழில் செய்து வருவதால் எங்களுக்கு மேலும் பணம் அதிகமாக தேவைப்படுகிறது எனவே உடனடியாக ரூபாய் 8 லட்சத்தை கொடுத்தால் இரட்டிப்பாகி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார்களாம்.
இதனை அடுத்து மணிவண்ணன் அவர்கள் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாகவும் பணம் இரட்டிப்பாகி வரும் என்ற ஆசையின் காரணமாகவும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரூபாய் 5 லட்சத்தை ரொக்கமாக உண்ணாமலை மற்றும் செல்வத்திடம் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதத்தில் செல்வத்தின் வங்கி கணக்கில் ஒரு முறை ரூபாய் ஒரு லட்சம் மறுமுறை ரூபாய் 60 ஆயிரம் மணிவண்ணன் செலுத்தியுள்ளார்.
மேலும் டிசம்பர் மாதத்தில் உண்ணாமலையிடம் மீண்டும் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்துள்ளார் ஆக மொத்தம் 7 லட்சத்தில் 60 ஆயிரத்தை மணிவண்ணன் உண்ணாமலையிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஏல சீட்டுகளில் பணம் செலுத்திய அவர்களுக்கு சீட்டு முதிர்வடைந்து பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்து வந்துள்ளனர்.
திடீரென ஏலசீட்டை நிறுத்திவிட்டு உண்ணாமலை தலைமறைவானார். இதையடுத்து மணிவண்ணன் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதேபோல், அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகப்பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், உண்ணாமலை மற்றும் அவரது கணவர் செல்வம் ஆகியோர் ஆண்டாப்பட்டு, அண்டம்பள்ளம், பவித்திரம், வலசை, இசுக்காழி காட்டேரி பகுதிகளில் மக்களை ஏமாற்றியது தெரிய வந்தது.
ஏலச்சிட்டியின் மூலமாக ரூபாய் 8,58,410, ம், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூபாய் 62 லட்சத்து 30 ஆயிரம் என மொத்தம் 70 லட்சத்து 88 ஆயிரத்து 410 மோசடி செய்தது தெரிய வந்தது.
இந்நிலையில் இன்று பண மோசடியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியை உண்ணாமலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது கணவர் செல்வத்தை தேடி வருகின்றனர்.