சிவகாசி அருகே பள்ளித் தலைமை ஆசிரியை மீது தீண்டாமை புகார்: கல்வி அதிகாரி விசாரணை
மாணவர்களை தண்டிக்கும் வகையில் ஒரு மாணவரை பள்ளியில் இருந்து நீக்கி மாற்றுச் சான்றிதழை தலைமையாசிரியர் வழங்கினாராம்;
பேராபட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்திய மாவட்ட கல்வி அதிகாரி ஞானகௌரி
தீண்டாமை ஒரு சமூகக் குழுவினரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறையாகும். சமூகத்தின் பொது விதிகளுக்குள் வரையறுக்க முடியாதவர்கள் வழமையாக தீண்டாமைக்குட்படுத்தப்படுகின்றனர்.
எடுத்துக்காட்டாக பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள், குற்றவாளிகள், ஓரினச்சேர்கையாளர்கள், திருநங்கைகள், கழிவகற்றும் தொழில் செய்பவர்கள் போன்றவர்கள் தொடர்ச்சியாக தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தீண்டாமை சமூகத்தின் பொது விதிகளுக்கு அமையாதவர்களையும், விதிகளை மீறியவர்களையும் தண்டித்து பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் செயற்பாடாகவும் பயன்பட்டுள்ளது. இந்திய விடுதலைக்குப் பின்னர் தீண்டாமை சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது..
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 43 கிராமங்களிலும் அதற்கு அடுத்தபடியாக விழுப்புரம் மாவட்டத்தில் 25 கிராமங்களிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் 24 கிராமங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் 341 கிராமங்களில் தீண்டாமை கட்டுப்பட்டிருப்பதாகவும் இந்த தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமை வன்கொடுமை கடைபிடிக்கப்படுவதாக தமிழ்நாடு காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளது
மதுரை ஆட்சியர் சமீபத்தில் கொடிக்குளம் ஊராட்சி தீண்டாமை கடைபிடிக்காத மத நல்லிணக்க ஊராட்சி என அறிவித்து ரூ.10 லட்சம் பரிசு வழங்கியிருந்தார். ஆனால் அதே மதுரையில் தான் 43 கிராமங்களில் தற்போதும் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக காவல்துறை அடையாளப்படுத்தியுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் படி 2009-ம் ஆண்டிலிருந்து 2018 வரையிலான பத்து ஆண்டுகளில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் 27.3% அதிகரித்துள்ளன.ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் கல்வித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்தச்சூழ்நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தீண்டாமை கடைப்பிடிப்பதாக ஆசிரியர் மீது மாணவர்கள் புகார் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பேராபட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பத்தாம் வகுப்பில் இரண்டு பிரிவுகளில் 34 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் பள்ளி சார்பாக நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 10ம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தங்களை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லாததற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை ஜுலியட்ரதி தான் காரணம் என்று கூறி, 10ம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் ஒன்றாக கூடி, தலைமை ஆசிரியையைக் கண்டித்து முழக்கமிட்டனர். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியை ஜுலியட்ரதி, மாணவர்களின் ஜாதியைக்குறிப்பிட்டு அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் மாணவர்களை தண்டிக்கும் வகையில் ஒரு மாணவரை பள்ளியில் இருந்து நீக்கி மாற்றுச் சான்றிதழும் வழங்கினார். தனக்கு எதிராக யாராவது முழக்கமிட்டால் அவர்களையும் பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழ் வழங்கி நீக்கி விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியிடம், தலைமை ஆசிரியை குறித்து புகார் மனு கொடுத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிக்கு, ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட கல்வி அதிகாரி ஞானகௌரி, பேராபட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும் என்று கல்வி அதிகாரி ஞானகௌரி கூறினார்.