சிவகாசி, திருத்தங்கல் ரயில் நிலையங்களில் ரயில் மறியல்: எம்.பி. மாணிக்கம் தாகூர்

கொல்லம் விரைவு ரயில், சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில் நிலையங்களில் நின்று செல்ல வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தப் போவதாக எம்.பி. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு

Update: 2022-09-17 10:32 GMT

மாணிக்கம் தாகூர் எம்.பி

கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இயங்கி வருகிறது. கொல்லம் விரைவு ரயில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை வழியாக சென்னைக்கு செல்கிறது.

இந்த விரைவு ரயில் சென்னைக்கு செல்லும் போது மாலை 4.40 மணிக்கு சிவகாசி ரயில் நிலையத்திலும், 4.45 மணிக்கு திருத்தங்கல் ரயில் நிலையத்திலும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கிறது. மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் இந்த விரைவு ரயில் திருத்தங்கல் மற்றும் சிவகாசி ரயில் நிலையங்களை நள்ளிரவு 01.45 மணிக்கு கடந்து செல்கிறது.

சென்னையிலிருந்து வரும் கொல்லம் விரைவு ரயில் விருதுநகரில் நின்று பயணிகள் இறங்கிய பின்பு திருத்தங்கல், சிவகாசி ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்கின்றது. விருதுநகருக்கு அடுத்து திருவில்லிபுத்தூரில் ரயில் நின்று செல்கிறது. இதனால் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொல்லம் விரைவு ரயில் திருத்தங்கல், சிவகாசி ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்த பின்பும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எம்.பி.மாணிக்கம் தாகூர், ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த போது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் கூறப்பட்டது. ஆனால் மத்திய ரயில்வே அமைச்சர் பதில் கூறி ஓராண்டுக்கு மேல் ஆகியும், கொல்லம் விரைவு ரயில் சிவகாசி, திருத்தங்கல் ரயில் நிலையங்களில் நிற்காமலே செல்கின்றது.

இது குறித்து விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் மதுரை, தென்காசி, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினருடன் கலந்து பேசினார். மேலும் சிவகாசி தொழில் மற்றும் வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம், எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் நடந்தது. இது குறித்து அவர் கூறும்போது,

தமிழக மக்களை மத்திய  அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தென் மாவட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படாத நிலை உள்ளது. சென்னை செல்லும் போது சிவகாசி, திருத்தங்கல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் ரயில் மறு மார்க்கத்தில் வரும்போது ஏன் நிற்காமல் செல்கிறது?. பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் விரைவு ரயில் திருத்தங்கல், சிவகாசி ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி, சிவகாசி மாநகராட்சி பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர்கள் இணைந்து 22ம் தேதி, மாலை 5 மணிக்கு சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில் நிலையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறினார். ஆலோசனை கூட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News