விருதுநகரில் ஜவுளி பூங்காவுக்கு இடம் ஒதுக்க மாவட்ட ஆட்சியருக்கு பாஜக கோரிக்கை
ஜவுளி பதப்படுத்தும் ஆலை அமைக்க, 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, பாஜக கட்சியினர், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.;
விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்த , பாஜக கட்சியினர்
.விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பதப்படுத்தும் ஆலை அமைக்க, 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, பாஜக கட்சியினர், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியிடம், பாரதிய ஜனதா கட்சி மாநில பொது செயலாளர் சீனிவாசன் அளித்துள்ள மனுவில் அவர் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் - விருதுநகர் இடையே, 2 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திருச்சுழி பகுதியில் 150 கோடி ரூபாய் செலவில் ஜவுளி பதப்படுத்தும் பூங்கா செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த திட்டங்களுக்கு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை தரக்கூடிய இந்த ஜவுளி பூங்கா அமைவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஜவுளி பதப்படுத்தும் ஆலை அமைப்பதற்கு தாமதம் ஏற்பட்டால், விருதுநகர் மாவட்டத்தில் வேறு பகுதியில் 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்காக, பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று அதில் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் நிகழ்வில், விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.