சிவகாசி அருகே கூலித் தொழிலாளி வெட்டிக்கொலைசெய்யப்பட்டார்

சிவகாசி சேனையார்புரம் காலனி பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (27). சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்துவந்தார்

Update: 2022-03-31 16:30 GMT

சிவகாசி அருகே, முன்விரோதத்தால் சுமை தூக்கும் தொழிலாளி  வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சேனையார்புரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தன் (27). சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்துவந்த இவர்மீது கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அரவிந்தன் தனது நண்பர் துரைப்பாண்டி (27) என்பவருடன் எம்.புதுப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு சரக்குகள் ஏற்றும் பணிக்காக சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் சிவகாசிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கள்ளப்பட்டி பகுதியில் உள்ள முள்ளுக்காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த ஒரு கும்பல், பயங்கரமான ஆயுதங்களுடன் அரவிந்தன் மற்றும் துரைப்பாண்டி இருவரையும் வழிமறித்து வெட்டினர்.

அரவிந்தனை குறி வைத்து தாக்கிய சம்பவத்தில், அதனை தடுக்க முயன்ற துரைப்பாண்டியையும் அந்தக்கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து எம்.புதுப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார், படுகாயங்களுடன் கிடந்த இருவரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரவிந்தன் சிகிச்சை பலனலிக்காமல்  உயிரிழந்தார். படுகாயமடைந்த துரைப்பாண்டிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிவகாசி அரசு மருத்துவமனையில் அரவிந்தன் உறவினர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடலை, உடல் கூறாய்வு செய்வதற்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News