சிவகாசி அருகே பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ விபத்து

சிவகாசி அருகே பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-06-01 07:18 GMT

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, பழனியாண்டவர்புரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (50). இவருக்கு சொந்தமான, கம்பி மத்தாப்பூ தயாரிக்கும் ஜெய்மனோஜ் ஸ்பார்க்லர்ஸ் என்ற பெயரிலான பட்டாசு ஆலை, சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள அனுப்பங்குளம் பகுதியில் உள்ளது.

நிர்வாக காரணங்களால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த பட்டாசு ஆலை செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றிரவு அனுப்பங்குளம் பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது பூட்டிக்கிடந்த பட்டாசு ஆலையில் பலத்த இடி, மின்னல் தாக்கியதில் அங்கிருந்த மத்தாப்பூக்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது.

மேலும் ஆலை வளாகத்தில் போட்டு வைக்கப்பட்டிருந்த கழிவு அட்டை, பேப்பர்கள், கழிவு பெட்டிகளிலும் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News