ராஜபாளையம் அருகே மகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

ராஜபாளையம் அருகே சோகம். குடும்பத்தகராறில், மகளுடன் கிணற்றில் விழுந்து தாய் தற்கொலை.

Update: 2022-04-30 11:37 GMT

தற்காெலை செய்து காெண்ட தாய் மற்றும் மகளின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (40). இவரது மனைவி பாப்பா (34). இவர்களுக்கு சுபாஸ்ரீ (14), தென்னரசி (12), மாதவி (10) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். பரமசிவம் ஏ.டி.எம். இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில், வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மனைவி பாப்பாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலையில் வேலைக்குச் செல்லும்போது பரமசிவம் வீட்டில் சாப்பிடாமல் கோபத்தில் சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாப்பா, தனது கடைசி மகள் மாதவியை அழைத்துக்கொண்டு வாழவந்தான் கண்மாய் பகுதியில் உள்ள கிணற்றிற்குச் சென்று, மகளை கிணற்றுக்குள் தள்ளிவிட்டு தானும் கிணற்றில் விழுந்துள்ளார். வீட்டைவிட்டு சென்ற பாப்பா நீண்ட நேரமாக திரும்பி வராததால், அவரது உறவினர்கள் தேடிச் சென்றனர். கிணற்றின் அருகே பாப்பா மற்றும் மாதவியின் செருப்புகள் கிடந்ததை வைத்து அவர்கள் இருவரும் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்று கிணற்றுக்குள் குதித்து தேடிப்பார்த்தனர்.

பின்னர் இது குறித்து தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தளவாய்புரம் தீயணைப்பு நிலைய வீரர்களை வரவழைத்து கிணற்றில் தேடும் பணியை துவக்கினர். சுமார் 3 மணி நேரம் போராடி சிறுமி மாதவியின் உடலை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். கடும் போராட்டத்திற்கு பின்பு, சுமார் 6 மணி நேரமாக போராடி, கிணற்றின் 70 அடி ஆழத்தில் சிக்கியிருந்த பாப்பாவின் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட இருவரின் உடல்களும் தளவாய்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில், மகளுடன் கிணற்றில் விழுந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News