இருசக்கர வாகனத்தில் சக்கரத்தில் சேலை சிக்கி மனைவி சாவு: கணவர் காயம்

Wife killed after saree stuck in wheel of two-wheeler

Update: 2022-06-18 08:15 GMT

அருப்புக்கோட்டை அருகே, இருசக்கர வாகன சக்கரத்தில் சேலை சிக்கியதால் மனைவி உயிரிழந்தார் உடன் சென்ற கணவர் பலத்தகாயமடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (42). இவரது மனைவி தனலட்சுமி (38).இவர்கள் இருவரும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அருப்புக்கோட்டை ரயில்வே மேம்பாலப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பலத்த காற்று வீசியது. இதில் தனலட்சுமியின் சேலை, அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியது. இதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது. இதில் சண்முகவேல், தனலட்சுமி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். விபத்தை பார்த்து அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து, படுகாயமடைந்து கிடந்த இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனலட்சுமி, சண்முகவேல் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சண்முகவேல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News