என்னடா இது கொள்ளையனுக்கு வந்த சோதனை.

பட்டுக்கோட்டை அருகே கோயில் பூட்டை உடைக்க முடியாமல் கொள்ளையன் போராடும் காட்சி இது என்னடா கொள்ளையனுக்கு வந்த சோதனை என்பது போல் இருந்தது

Update: 2021-11-30 16:00 GMT

கோவில் பூட்டை உடைக்க போராடும் கொள்ளையன்


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள நடுவிக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ளது நாடியம்மன் கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் மிகச் சிறப்பான முறையில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த கோயிலில் இரண்டு மூன்று தடவை மர்மநபர்கள் கோயிலின் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.

இது பற்றி அவ்வப்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் முக கவசம் அணிந்து இரும்பு ராடை கொண்டு கோயில் கருவறையின் பூட்டை உடைக்க 1 மணிநேரமாக முயற்சித்துள்ளார். இருந்தும் பூட்டு பலமாக இருந்ததால் பூட்டை உடைக்க முடியாமல் திரும்பிச் சென்று உள்ளார்.இந்த காட்சிகள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து மீண்டும் வாட்டாத்திக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதற்கும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுபற்றி இந்த கிராமத்து மக்கள் கூறுகையில் அடிக்கடி எங்கள் கோயிலில் திருட்டு போகிறது. சமீபத்தில் நடந்த கொள்ளை முயற்சியை சிசிடிவி காட்சிகளோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் இதுவரை மனு ரசீது கூட வழங்கவில்லை. கொள்ளையர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. பெரிய அளவில் கோயிலில் கொள்ளை நடந்து போய் விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது. எனவே உடனடியாக உயரதிகாரிகள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

ரஜினிமுருகன் திரைப்படத்தில் ஒரு வாழைப்பழத்தை பறிக்க முடியாமல், போராடும் நகைச்சுவை நடிகர், இது என்னடா மதுரைகாரனுக்கு வந்த சோதனை என்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் கொள்ளையன் கோயில் பூட்டை உடைக்க முடியாமல் போராடும் காட்சி வெளியாகி, இது என்னடா கொள்ளையனுக்கு வந்த சோதனை என்பது போல் இருந்தது.

Tags:    

Similar News