பட்டுக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் வீடு புகுந்து வெட்டிக் கொலை

பட்டுக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் வீடு புகுந்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை வலை வீசி தேடிவருகின்றனர்.

Update: 2021-04-22 10:30 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அழகியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புரோஸ் (45). இவர் அழகியநாயகிபுரம் ஊராட்சியில் 3-வது வார்டு ஊராட்சி உறுப்பினர்.

இவர் பட்டுக்கோட்டையில் ஸ்டுடியோ கடை நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று இரவு வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் சிலர் அன்புரோஸின் வீட்டிற்குள் புகுந்து சரமாரி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.

இதில் பலத்த காயமடைந்த அன்புரோஸை அருகில் உள்ள அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உடனே அன்புரோஸின் உடல் பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News