மல்லிப்பட்டினம் அருகே கடலில் குதித்து மீனவர் தற்கொலை முயற்சி

அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கடலில் குதித்து மீனவர் தற்கொலை முயற்சி.

Update: 2021-08-02 08:15 GMT

கடலில் குதித்த மீனவரை சக மீனவர்கள் காப்பாற்றும் காட்சி.

அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது மீன் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகத்தை தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு அலுவலகத்தை பூட்டு போடமுயன்றனர்.

இதையடுத்து காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மீனவர்கள் அலுவலகத்திற்கு முன்னால் அமர்ந்து அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை தடுக்க தவறிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில் திடீரென ஒரு மீனவர் ஆர்ப்பாட்டத்திலிருந்து எழுந்து ஓடிச்சென்று தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை தடுத்து தங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று சத்தம் போட்டவாறே கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் அவரை மீட்டு கரை சேர்த்தனர்.. இதனால் மேலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு மணி நேரமாக அப்பகுதியில் மீனவர்கள் முகாமிட்டு தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என்று ஆணித்தரமாக கூறி அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags:    

Similar News