தனியார் நிதி நிறுவன நெருக்கடியால் மூதாட்டி தற்கொலை முயற்சி..!

நிதி நிறுவனத்தின் கடன் நெருக்கடியால் மூதாட்டி ஒருவர் மாடியிலிருந்து விழுந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2021-06-20 14:15 GMT

பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை வடகாடு அய்யப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் அய்யப்பன். இவர் அதே ஊரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். ஹோட்டல் விரிவாக்கத்துக்காக 2019-ம் ஆண்டு தனியார் நுண்நிதி நிறுவனத்தில் மாதம் ரூ.40 ஆயிரம் வீதம் திருப்பி செலுத்துவதாக கூறி ரூ.25 லட்சம் கடனாக பெற்றிருந்தார். இந்நிலையில் கொரோனா முதல் அலை ஊரடங்கால் அய்யப்பன் நிதி நிறுவனத்துக்கு முறையாக கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் நிதி நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் அய்யப்பன் புகார் அளித்தார். போலீஸார் தலையிட்டு அவரிடம் பிரதி மாதம் ரூ.10 ஆயிரம் வசூலித்து கொள்ள வேண்டும் என கூறினர். சில மாதங்கள் பணம் திருப்பி செலுத்திய நிலையில், கொரோனா இரண்டாவது அலையில் தொழில் மேலும் முடங்கியதால், ஹோட்டலை பூட்டிவிட்டார். நிதி நிறுவனத்துக்கு கடன் தொகையை செலுத்த முடியாமல் அவதிப்பட்டார், வேறு சொத்துகளை விற்று திருப்பி செலுத்துவதாக இருந்த நிலையில் நிதி நிறுவனத்தினர் அய்யப்பனின் வீட்டுக்கே சென்று மிரட்டத் தொடங்கினர்.

இதயடுத்து கடந்த 11-ம் தேதி அய்யப்பன் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு, நிதி நிறுவனத்தினர் பணத்தை தாராததால் வீட்டுக்கே வந்து மிரட்டுவதாகவும், இதனால் குடும்பத்தினர் மிகுந்த மனஉளைச்சலில் இருப்பதாகவும் புகார் மனு அனுப்பியிருந்தனர். இதற்கிடையில் அய்யப்பனின் தாய் தமிழரசி கடந்த 18-ம் தேதி மன உளைச்சல் அதிகமாகி வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயமடைந்த அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News