கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் திறக்கப்படாத பொது சுகாதார வளாகம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சத்தில் பொது சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.

Update: 2023-03-21 00:00 GMT

புதுக்கோட்டை அருகே கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகியும் சுகாதார வளாகம் பொது மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்படவில்லை.

கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடமாகிவிட்ட மேல்நிலைப்பட்டி பொது சுகாதார வளாகத்தை தாமதமின்றி  திறக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே மேல்நிலைப்பட்டியில் கட்டி முடிக்கப்பட்டு ஒருவருடமாக மூடிக்கிடக்கும் பொது சுகாதார வளாகத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்நிலைப்பட்டி கிளைக் கூட்டம் கிளைச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், ஒன்றியச் செயலாளர் ஆர்.வி.ராமையா, ஒன்றியக்குழு உறுப்பினர் அடைக்கப்பன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம், மேல்நிலைவயல் ஊராட்சிக்கு உட்பட்டது மேல்நிலைப்பட்டி. இங்கு உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகியும் சுகாதார வளாகம் பொது மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்படவில்லை.

மேல்நிலைப்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை இல்லை. இதனால், அவர்கள் குறிப்பாக பெண்கள் காலைக் கடனைக் கழிப்பதற்கு கடுமையான அவஸ்தையை சந்தித்து வருகின்றனர். எனவே, கட்டி முடிக்கப்பட்ட பொது சுகாதார வளாகத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டுமென மாவட்ட நிர்hவகத்தை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News