புதுக்கோட்டை அருகே திருமண மண்டபத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

திருமண மண்டபத்தை வாடகைக்கு விடும் முன்னதாக, அனைத்து பராமரிப்பு பணிகளும் முறையாக செய்திருக்க வேண்டும்

Update: 2021-09-09 13:00 GMT

கீரனூர் திருமண மண்டபத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்து போன இளைஞர் தர்மராஜ் பழைய புகைப்படம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மின்சாரம் பாய்ந்து சமையல் உதவியாளர் உயிரிழந்தார்.

கீரனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுகோட்டை அருகே உள்ள சிதம்பரம்பட்டியை சேர்ந்த தர்மராஜ்(24)  என்ற  இளைஞர் சமையல் பணிக்காக சென்றுள்ளார்.

இன்று அதிகாலையில் சமையல் பணி செய்து கொண்டிருந்தபோது, சமையல் கூடத்தில் உள்ள எக்ஸாஸ்ட் பேனில் உள்ள மின்சார வயர்  அறுந்து  ஜன்னலில் உரசிக்கொண்டிருந்தது. இதை அறியாத, தர்மராஜ் அந்த ஜன்னலில் கை வைக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

அங்கிருந்த, சக ஊழியர்கள் தர்மராஜை மீட்டு, கீரனூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண மண்டபத்தை  வாடகைக்கு விடும் முன்னதாக, அனைத்து பராமரிப்பு பணிகளும் முறையாக  செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த திருமண மண்டபத்தில் முறையாக பராமரிப்பு பணி செய்யாததால் சமையல் செய்ய சென்ற இளைஞரின் உயிர்  பறிபோனது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News