வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாடு முத்துமாரியம்மன் கோயில் நடைபெற்ற தேரோட்டத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்பு

Update: 2022-04-25 13:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வடகாடு முத்துமாரியம்மன்கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த  தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வடகாடு முத்துமாரியம்மன் கோயில்  இன்று  நடைபெற்ற தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 17-ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து, மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவில் நூற்றுக்கணக்கான பெண்களின் ஆராத்திக்குடங்களோடு அணிவகுக்க அம்மன் வீதியுலா நடைபெற்று வந்தது. மேலும், பால்குடம், காவடி எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். அவ்வப்போது அன்னதானமும் செய்யப்பட்டது. மேலும், தினந்தோறும் இரவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொங்கலையொட்டி அனைவரது வீடுகளிலும் பொங்கல் வைக்கப்பட்டு, ஆடு, கோழிகளை வெட்டி பலியிடப்பட்டன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று மாலை முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான தேரில், அம்மன் எழுந்தருளல் செய்யப்பட்டது. பின்னர், தேரின் வடத்தை பிடித்து பக்தர்கள் பக்தி பரவசத்தோடு இழுத்து வந்தனர்.

இரவில், கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோடும் நான்கு வீதிகளிலும் தேர் இழுத்து வரப்பட்டது. அப்போது, ஒவ்வொரு கரைகாரர்கள் சார்பிலும் தனித்தனியே வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.தேரோட்டத் திருவிழால் வடகாடு மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். வடகாடு போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

ஏப்.26-ம் தேதி செவ்வாய்க்கிழமை  மாலை 4 மணிக்கு மஞ்சள் விளையாட்டு நடைபெறும். இதையொட்டி மயில் வாகனத்தில் அம்மன் எழுந்தருளல் செய்யப்பட்டு, கோயிலை சுற்றி வரப்படும். கொரோனா பரவலினால் கடந்த 2 ஆண்டுளுக்கு பிறகு நிகழாண்டு தேரோட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News