தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்த ஹைட்ரோகார்பன் எதிர்ப்புப் போராட்டக் குழுவினர்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வருக்கு ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

Update: 2021-06-14 13:05 GMT

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதற்கு நன்றி தெரிவித்து ஹைட்ரோ கார்பன் போராட்டக்குழுவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே உள்ள கருக்காகுறிச்சி வடதெரு கிராமத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஓன்ஜிசி ஆழ்துளை கிணற்றில் மீண்டும் எரிவாயு எடுப்பதற்கு 10ம் தேதி மத்திய அரசு சர்வதேச ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

மத்திய அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருக்காகுறிச்சி வடதெரு மற்றும் கோட்டைக்காடு ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்ட குழு வினர்.நேற்று ஒன்ஜிசி எண்ணெய்க் கிணறு அமைந்துள்ள இடத்தில் அரை நிர்வாண போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நேற்று மாலை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.அந்தக் கடிதத்தில் தமிழகத்தில் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த ஒரு எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது என்றும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு இதுபோன்ற நிலைப்பாட்டை எடுக்க கூடாது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி வடதெரு,நெடுவாசல் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதற்கு நன்றி தெரிவித்து கோட்டைகாட்டில் நடைபெற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

Tags:    

Similar News