திருவரங்குளம் ஒன்றியப்பகுதியில் ரூ.54.50 லட்சத்தில் பணிகள்: அமைச்சர் தொடக்கம்

Update: 2022-03-16 12:00 GMT

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.54.50 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.54.50 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற  பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்   (16.03.2022) பூமி பூஜையில் பங்கேற்று தொடக்கி வைத்தார். 

பின்னர் அமைச்சர் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில்  மொத்தம் ரூ.54.50 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் பூமி பூஜையுடன் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.  திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், அரசடிப்பட்டியில், கே.வி.கோட்டை, மாஞ்சான்விடுதி, கோவிலூர் மற்றும் புதுக்கோட்டைவிடுதி ஆகிய பகுதிகளை சேர்ந்த 4,897 விவசாயிகளின் 13,499 கால்நடைகள் பயன்பெறும் வகையில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கால்நடை மருந்தகம் கட்டுமானத்திற்கான பணி பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கால்நடை மருந்தகத்தில், ஒரு மருத்துவர் அறை, ஒரு பணியாளர்கள் அறை, ஒரு மருந்து மற்றும் இருப்பு அறை, கால்நடை கூடம்  ஆகியவற்றுடன், கால்நடைகளுக்கு சினை ஊசி, மலடு நீக்கம், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம் போன்ற பல்வேறு சிகிச்சைகள் வழங்கும் வகையில் கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.  வடகாடு ஊராட்சியில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு துணை சுகாதார நிலையம் கட்டுமானப் பணியானது பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதி பொதுமக்கள் நீண்டதூரம் சென்று சிகிச்சை பெறுவது தவிர்க்கப்பட்டு, தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சிகிச்சை பெறும் நிலை ஏற்படும். எனவே இந்த வளர்ச்சித் திட்டப் பணிகளை பெறும் பொதுமக்கள் இதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சிகளில்; கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் சம்பத், துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) கலைவாணி, உதவி இயக்குநர் (கால்நடைத்துறை) லிடியா, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் ஆனந்தி இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News