மக்கள் அனைவரும் எம்எல்ஏ.,கள் தான்- திமுக வேட்பாளர்

Update: 2021-03-19 06:15 GMT

நான் வெற்றி பெறும் பட்சத்தில் நான் மட்டும் எம்எல்ஏ., அல்ல இந்த தொகுதியில் உள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ. தான் என திமுக சார்பில் ஆலங்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மெய்யநாதன் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ மெய்யநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக கூட்டணி சார்பில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக வேட்பாளர் மெய்யநாதன் பேசுகையில், அரசு வேலை கிடைக்கும் நபர்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் குரூப் 2 போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள என்னுடைய சொந்த செலவில் பயிற்சி மையங்கள் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து அவர்கள் வாழ்வில் ஏற்றம் கிடைக்க பாடுபடுவேன்.

கீரமங்கலம் பகுதியில் அதிக அளவில் மலர்களும் விவசாய பயிர்களும் கிடைப்பதால் அதனை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைப்பதோடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுப்பேன். மு.க. ஸ்டாலின் சிறந்த நிர்வாகி. உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து நேர்மையாக செயலாற்றியவர். அவரது தலைமையில் அநீதிகளை கடந்து நன்மை செய்வோம். நான் வெற்றி பெறும் பட்சத்தில் நான் மட்டும் எம்எல்ஏ., அல்ல. இந்த தொகுதியில் உள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ.,கள் தான் என்றார் . கூட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி, ஒன்றிய செயலாளர்கள் ஞான.இளங்கோவன், தங்கமணி, நகர செயலாளர்கள் பழனிகுமார் , சிவகுமார் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News