வயது மூப்பு காரணமாக மூதாட்டி உயிரிழப்பு: காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு

வையாவூர் பகுதியில் வயது முதிர்வின் காரணமாகவே மூதாட்டி உயிரிழந்ததாக காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.

Update: 2024-06-14 10:23 GMT

கிணற்று நீரை ஆய்வு செய்த ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் திடீரென நேற்று முதல் கிராம மக்கள் பல பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் மூதாட்டி ஒருவர் வயிற்றுப்போக்கின் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே தொற்று நோய் ஏதேனும் ஏற்பட்டிருக்குமோ என பெரும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு கிராம மக்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகளை விநியோகம் செய்து வருகின்றனர்.

மேலும் ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்து கிராமம் முழுவதும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள முடுக்கி விட்டுள்ளார்.

இந்நிலையில் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டிகள் அனைத்தும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு குளோரின் கலக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.குடிநீர் பிரச்சினையாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சப்படும் நிலையில் குடிநீரை பரிசோதனை செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில்,  மூதாட்டி வயது மூப்பின் காரணமாகவும், சில குறிப்பிட்ட உடல் நோய் காரணமாகவும் திறந்து உள்ளதாகவும், இருப்பினும் இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி மட்டுமல்லாது அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் தற்போதைய கால சூழ்நிலை மாற்றம் காரணமாக குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது, 


மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி பொதுமக்களுக்கு அறிந்து கொள்ளும் வகையில் ஆட்டோ மூலம் இது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் கிணற்று நீரை பயன்படுத்தும் பொது மக்களுக்கு குளோரின் கலப்பதாக தெரிவித்த போது,  அதை அவர்கள் மறுத்து நிலையும் ஏற்பட்டது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து கிராமம் முழுவதும் ஊராட்சி நிர்வாகம் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் எடுத்து சாக்கடை நீர் மற்றும் கழிவுகள் அனைத்தையும் அகற்றி உள்ளது.

Tags:    

Similar News