காஞ்சிபுரத்தில் வருகிற 21 ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் 21ம்தேதி நடைபெற உள்ளது.

Update: 2024-06-10 02:53 GMT
கோப்பு படம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜூன் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 21.06.2024 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் வரும் 21ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள தவணைத் தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம்.

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (one time password) பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

உங்களது கைபேசியில் வைத்துள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதிசெய்யாமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறும், பி.எம். கிசான் திட்டத்தில் இதுவரை பயன்பெறாத விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி இத்திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News