சொர்க்கவாசல் திறப்பின்போது தலைகீழாக கவிழ்ந்த பெருமாள் சிலை: பக்தர்கள் அதிர்ச்சி

வாகனத்தில் சாமி சிலையை கட்டவில்லை என்பதால், பாதி தூரத்திலேயே, சாமி சிலை தலைகீழாக குப்புறக் கவிழ்ந்தது

Update: 2023-12-23 13:21 GMT

சொர்க்கவாசல் திறப்பின்போது கவிழ்ந்த சாமி சிலை - வீடியோ காட்சி 

பென்னாகரம் அருகே உள்ள ஆளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் காத்திருந்தனர். அப்போது சாமி சிலை சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து ஊர்வலத்திற்கு புறப்பட்டது.

அப்போது சாமி சிலையை சொர்க்க வாசல் வழியாக கொண்டு வந்தபோது பக்தர்கள் சிலையை தோளில் வைத்து ஊஞ்சலில் ஆடுவதுபோல் அசைத்தனர்.

அப்போது முறையாக வாகனத்தில் சாமி சிலையை கட்டவில்லை என்பதால், பாதி தூரத்திலேயே, சாமி சிலை தலைகீழாக குப்புறக் கவிழ்ந்தது. இதனால் சிலை மீது இருந்த அலங்காரங்கள் அனைத்தும் கலைந்தது.

பின்பு மீண்டும் முறைப்படி சாமி சிலை வைத்து அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு சாமி சிலை உரிய முறையில் ஊர்வலம் செல்லும் நிலையில் வைக்கப்பட்டது.

சொர்க்கவாசல் திறப்பின் போது பெருமாளை தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பு, பெருமாள் சிலை தலைகீழாக கவிழ்ந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News