பாலக்கோடு நான்கு ரோடு பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க கோரிக்கை

பாலக்கோடு நான்கு ரோடு பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் சிக்னல் அமைத்தால் விபத்தை தவிர்க்கலாம்.

Update: 2023-11-16 11:12 GMT

பென்னாகரம் நான்கு ரோடு பகுதி 

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு நான்கு ரோடு பகுதியில் இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. பாலக்கோடு புறவழிச்சாலையில் நான்குரோடு பகுதி நகரத்தை இணைக்கும் முக்கிய சாலையாகவும் உள்ளது.

இதில் பெரியாம்பட்டி சாலை, பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதூர்மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை , ஓசூர்-தர்மபுரி சாலை என பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இரவு நேரங்களில் நான்கு ரோடு பகுதியில் மின்விளக்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைவது மட்டுமின்றி அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது .

இப்பகுதியில் எச்சரிக்கை பலகை, சிக்னல் இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டுவது பெரும் சவாலாக உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கரங்களில் வருபவர்கள் அதிக வேகத்தில் வந்து சாலை தடுப்புகள் மீது மோதுவதும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகுவதும் வாடிக்கையாக உள்ளது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் நான்கு ரோடு பகுதியில் உயர்மின் கோபுரம் மின்விளக்கு மற்றும் தெருவிளக்கு உள்ளிட்டவை அமைக்க வேண்டும் என்றும், பிரிவு சாலை என்பதால் அப்பகுதியில் சிக்னல் அமைத்தால் விபத்தை தவிர்க்கலாம். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதியில் உயர் மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News