நெல் பழ நோய் கட்டுப்படுத்தும் முறைகள் வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

நெல் பழ நோய் கட்டுப்படுத்தும் முறைகள் வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

Update: 2021-12-02 16:15 GMT

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் தேவையான மழையளவு பெறப்பட்டதால், நமது மாவட்டத்தில் 15755 எக்டர் வரை சம்பா மற்றும் நவரை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு சில பகுதிகளில் நெல் பழ நோய் தென்படுகிறது. நெல் பழ நோய் என்பது நெல் பயிரை தாக்கும் பூஞ்சான நோய் ஆகும். இது பூக்கும். பால் பிடிக்கும் மற்றும் கதிர் முற்றும் தருனங்களில் நெல் பயிரை தாக்கி பெருமளவில் மகசூல் இழப்யை ஏற்படுத்தும் இதனை லட்சுமி நோய் அல்லது ஊதுபத்தி நோய் என்று அழைக்கப்படும். இந்த நோய் முதல் கட்டமாக நோய் தாக்கப்பட்ட விதைகள் மூலம், மண்ணில் காணப்படும் பூஞ்சான வித்துக்கள் மூலமாகவும் பரவும். இரண்டாம் கட்டமாக நோய் தாக்கப்பட்ட வயலில் இருந்து காற்றின் மூலம் அருகில் உள்ள வயலிற்கு பரவும்.

பூக்கும் தருனங்களில் மேகம் மூட்டம், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருத்தல், இரவில் வெப்ப நிலை குறைந்து பனி பொழிவுடன் இருத்தல் ஆகியவை நோய் பரவுவதற்கான காரணங்கள் ஆகும். இந்நோயால் உயர் விளைச்சல் நெல் இரகங்களான கோ.43, சி.ஆர்.1009, ஏடிடி 38, ஏடிடி 39 மற்றும் பிபிடி 5204 ஆகிய இரகங்கள் அதிக தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

இந்நோயின் தாக்குதல் முன்பட்ட சம்பாவை விட பின் பட்டத்தில் காலம் தாழ்த்தில் நடவு செய்யப்பட்ட பயிரில் தீவரமாக இருக்கும். இந்த நெல் பழ நோயை கட்டுப்படுத்த வயல் வரப்பை களைகளின்றி சுத்தமாகவும் பயிர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கடைசி மேல் உரம் அல்லது கதிர் உரமாக ஏக்கருக்கு 22 கிலோவிற்கு மேல் யூரியா இடுவதைத் தவிர்க்க வேண்டும். விதை விதைப்பதற்கு முன் கார்பன்டசிம்-2 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் இந்த நோய் பரவுவதை தடுக்க இயலும்.

நோய் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கண்ணாடி இலை பருவம், பால் பிடிக்கும் தருனங்களில் இரு முறை காப்பராக்ஸிகுளோரைடு மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் வீதம் அல்லது புரபிகோனசால் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 1.5 மில்லி வீதம் அல்லது ஹெக்ஸாகோனசால் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். காப்பர் ஹைட்ராக்சைட்-77 WP ஒரு ஹெக்டேருக்கு 1 / கிலோ தெளித்தும் கட்டுப்படுத்தலாம் என தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வசந்தரேகா தெரிவித்தார்.

Tags:    

Similar News