ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் வரத்து அதிகரித்துள்ளது.;
ஒகேனக்கல் காவிரி ஆறு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வினாடிக்கு 23,000 கன அடியிலிருந்து 30,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழக, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,100 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றில் நேற்று காலை வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 23,000 கன அடியாக உயர்ந்து வந்தது.
தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 30,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதை, மெயின் அருவி, ஐந்தருவி, சினியருவி உள்ளிட்ட பகுதிகளில் பார்ப்பதற்கு ரம்மியமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் வருவாய்த் துறை, காவல் துறையினர், ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்டோர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.