ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.;
தென்மேற்கு பருவமழை, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வந்த நிலையில். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று, வினாடிக்கு 12ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்பொழுது அணையில் திறப்பு குறைவு காரணமாக நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக சரிந்து உள்ளது. இருப்பினும் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை காவிரியின் நுழைவிடமான, தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.