ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 48 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

Update: 2021-11-15 04:15 GMT

ஒகேனக்கல் அருவி.

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதையடுத்து காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தும் குறையத்தொடங்கி நேற்று முன்தினம் வினாடிக்கு 22ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து குறைவதும் அதிகரித்துமாக காணப்பட்டது. அதன்படி நேற்று இரவு 7 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து மாமரத்துகடவு, கோத்திகல் பரிசல் துறைகளில் இருந்து மணல் திட்டு வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் போலீசார், காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தற்போது இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 48 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Tags:    

Similar News