ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக தொடர்ந்து அதிகரித்துள்ளது.

Update: 2021-09-04 04:30 GMT

ஒகேனக்கலில் ஆர்ப்பரித்து வரும் நீர்.

கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் கூடுதலாக தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 15ஆயிரம் கனஅடியாக வந்தது. தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News