பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் மரம் வளர்க்க விண்ணப்பிக்கலாம்

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் மரம் வளர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-16 04:30 GMT

கோப்பு படம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெப்பட்டி வட்டாரப் பகுதியில்,  விவசாய நிலங்களில் மரங்களை வளர்க்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் உதவி இயக்குநர் எஸ்.மோகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கவும், விவசாய நிலங்களில் பசுமையான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில், புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டம்,  2021-22 ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் மரம் வளர்ப்பதற்காக,  25 ஆயிரம் தேக்கு, 2650 செம்மரம், 1000 வேம்பு, 1000 நெல்லி உள்ளிட்ட மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ளன. மரக்கன்றுகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு,  அரசு சார்பில் பராமரிப்பு ஊக்கத் தொகைகள் வழங்கப்படும்.

தற்போது மழைக் காலம் என்பதால் மழைநீரை பயன்படுத்தி விவசாயிகள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம். உழவன் செயலி வழியாக விவசாயிகள் தங்களின் பெயர், முகவரி, கைப்பேசி எண்கள், வங்கிக் கணக்கு எண்களை பதிவு செய்து பாப்பிரெட்டிப்பட்டி பகுதியிலுள்ள உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News