அரூரில் விளையாட்டு மைதானம் முழுமையாக திறக்கப்படுமா? இளைஞர்கள் எதிர்பார்ப்பு

அரூரில் உள்ள விளையாட்டு மைதானத்தை மாலை நேரங்களிலும் திறக்கவேண்டும் என, இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-09 13:45 GMT

அரூர் விளையாட்டு மைதானம்

தருமபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் காலை, மாலை நேரங்களில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யவும், கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்டவை விளையாடவும், விளையாட்டுகளை சிறுவர்கள், பெரியவர்கள் என பலர் விளையாட வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மைதானம் மூடப்பட்டது. தொடர்ந்து விளையாட்டு மைதானங்களுக்கு தளர்வுகள் அளித்து அதில் நடைபயிற்சி, உடற்பயிற்சி ஆகியவைகளை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், இம்மைதானம் திறக்கப்படவில்லை. 

தருமபுரி மாவட்டத்தில் தமிழக இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 26 ஆம் தேதியன்று உடல் தகுதிக்கான தேர்வு தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த உடல் தகுதி தேர்விற்கு பயிற்சி எடுக்க அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், தினம்தோறும் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு, காலை 05:30 மணி முதல் 08:30 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மாலை நேரங்களில் அனுமதி அளிக்காததால், காவலர் உடற்தகுதி தேர்விற்க்கு பயிற்சி எடுக்க வருபவர்களும், நடைபயிற்சி மேற்கொள்ள வரும் பெண்கள், வயதானவர்கள் என அனைவரும், சுவற்றில் ஆபத்தான வகையில் அமைக்கப்பட்டுள்ள கம்பி  வேலி மீது ஏறி, இறங்கி சென்று பயிற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். 

எனவே,  காவலர் தேர்வுக்கு செல்லும் இளைஞர்களின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் இந்த விளையாட்டு மைதானத்தை மாலை நேரங்களிலும் திறக்கவேண்டும் என இளைஞர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News