அரூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலை துவங்க விவசாயிகள் கோரிக்கை
அரூர் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு அரவை ஆலை துவங்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளில், 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, மரவள்ளிக்கிழங்கின் விலை வீழ்ச்சியால், நஷ்டம் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு அரசு சார்பில், மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலையை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, பா.ஜ.க. மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் குழந்தை ரவி கூறியதாவது: வறட்சியை தாங்கி வளரக்கூடியது என்பதால், மானாவாரியாகவும், இறவைப் பாசனம் மூலமும், மரவள்ளிக்கிழங்கை நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்தாண்டு, 70 கிலோ எடை கொண்ட, ஒரு மூட்டை மரவள்ளிக்கிழங்கு, 400 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து, இடைத்தரகர்கள் கொள்முதல் செய்தனர். விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், மரவள்ளிக்கிழங்கின் விலையை தனியார் அரவை ஆலை உரிமையாளர்களே நிர்ணயம் செய்யும் நிலையுள்ளது. ஒருசில நேரங்களில் சிண்டிகேட் அமைத்து மரவள்ளிக்கிழங்கின் விலையை குறைத்து வாங்குகின்றனர்.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி, மரவள்ளிக்கிழங்கிற்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வதுடன் கூட்டுறவுத்துறை மூலம், அரூர் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு அரவை ஆலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர் கூறினார்.