மொரப்பூரில் திமுகவினர் - நாம் தமிழர் கட்சியினர் மோதலால் பரபரப்பு

மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய கூட்டத்தில், திமுகவினர் தகராறு செய்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

Update: 2021-12-22 00:30 GMT

 மொரப்பூரில், நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்ட மேடையை சூழ்ந்து எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர். 

தர்மபுரி மாவட்டம்,மொரப்பூரில், அரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில்  மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மொரப்பூர் மேற்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி செயலாளர் சி.மகேஷ் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் வெள்ளிங்கிரி, அரூர் தொகுதி தலைவர் இளையராஜா, அரூர் தொகுதி செயலாளர் திலீப், அருர் தொகுதி பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி பசுபதி வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர்கள் ஹிம்லர், தஞ்சை.கரிகாலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அவர்கள், ஏழு பேர் விடுதலை தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.  இதற்கு, மொரப்பூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் இ.டி.டி. செங்கண்ணன் தலைமையில் தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே அங்கு சலசலப்பும், தள்ளு முள்ளும்  ஏற்பட்டது. நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதனால், பொதுக்கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியால், மொரப்பூரில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News