வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள் இடமாற்றம்

வறட்சி நீங்கிய பிறகு மீண்டும் பழைய இடத்திற்கே வளர்ப்பு யானைகளை கொண்டு வர வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Update: 2024-04-26 13:00 GMT

யானைகள் முகாம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப், கோழிக்கமுத்தி பகுதியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு வனத்துறையினர் சார்பில் சுமார் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் கும்கி யானைகள் மற்றும் வளர்ப்பு யானைகள் பாகன்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு சரியான மழைப் பொழிவு இல்லாததால் வனப்பகுதி முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. மேலும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், குட்டைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. இதனால் கோழிகமுத்தியில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு போதுமான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறது..

இதனால் கோழிக்கமுத்தி முகாமில் இருந்து வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி எஸ்டேட் பகுதிக்கு கும்கிகளின் அரசன் என்று அழைக்கப்படும் ஓய்வு பெற்ற கலீம் யானை, பேபி, காவேரி உள்ளிட்ட யானைகளையும் மற்றும் வரகளியாறு பகுதிக்கும் சின்னாறு பகுதிக்கும் என உள்ளிட்ட மூன்று இடங்களுக்கு யானைகளை கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

ஆறு யானைகளை மட்டும் வளர்ப்பு யானைகள் முகாம் இருக்கும் அதே பகுதியில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். டாப்சிலிப் பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததாலும் மேலும் யானைகள் முகம் பகுதியில் உள்ள யானைகளின் பாகங்களுக்கு வீடுகள் கட்டிகள் பணிகள் நடைபெற்று வருவதாலும், தற்போது இந்த 20 யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வறட்சி நீங்கிய பிறகு மீண்டும் பழைய இடத்திற்கே வளர்ப்பு யானைகளை கொண்டு வர வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News