தொண்டாமுத்தூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்: கிராம மக்கள் அச்சம்

குடியிருப்பு பகுதி வழியாக பிரதான சாலையை காட்டு யானைகள் கூட்டமாக கடந்து சென்றன. இதனை அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

Update: 2024-04-12 05:45 GMT

காட்டு யானைக்கூட்டம்

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு வருகிறது. இவ்வாறு கிராமப் பகுதிகளுக்குள் வரும் யானைகளை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிகளுக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் கோடை காலம் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் வனப்பகுதி வறண்டு போனது. இதனால் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் அதிகளவில் ஊருக்குள் வர துவங்கின. இந்நிலையில் இன்று காலை பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தொண்டாமுத்தூர் பகுதிக்குள் நுழைந்தது. குடியிருப்பு பகுதி வழியாக பிரதான சாலையை காட்டு யானைகள் கூட்டமாக கடந்து சென்றன. இதனை அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் வீடியோ காட்சிகளை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளனர்.

மேலும் தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அந்த யானை கூட்டத்தை தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் மலை அடிவாரத்தில் வனத்துறையினர் விரட்டினர். இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் அந்த சாலையை கடந்து செல்கின்றனர். மேலும் வனத் துறையினர் யானைகள் ஊருக்குள் புகுந்து உயிர் சேதம் மற்றும் விவசாய நிலங்களை சேதத்தை ஏற்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News