சூலூரில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய இருவர் கைது

குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து புலன் விசாரணை நடந்து வந்தது.

Update: 2024-06-24 14:15 GMT

கைது செய்யப்பட்டவர்கள்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிக்கும் பார்த்திபன் என்பவர் கடந்த 20ம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரது மகனை பார்க்க சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவிலிருந்த சுமார் 18 சவரன் தங்க நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பார்த்திபன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து புலன் விசாரணை நடந்து வந்தது.

அதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (33) மற்றும் அவரது மனைவி தேவி (31) ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இருவரும் வீடு புகுந்து திருடிய வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து பிரகாஷ் மற்றும் தேவி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18 சவரன் தங்க நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல்  செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News