சூலூரில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் : இருவர் கைது..!

நீலாம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Update: 2024-06-17 13:30 GMT

கோப்பு படம் 

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டநீலாம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் நீலாம்பூர் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு வந்த நீலாம்பூர் பகுதியை சேர்ந்த சுந்தர ஜெகதீசன் (21) மற்றும் ஓடிசா மாநிலத்தை சேர்ந்த ரீனு ஐயுகா (28) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.





 


 


கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல் துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 93 நபர்கள் மீது 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து சுமார் 179.895 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News