சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ; போலீசார், கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

மாணவ மாணவிகள் துண்டு பிரசுரங்கள் வழங்கி சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Update: 2024-02-20 13:00 GMT

சைபர் க்ரைம் விழிப்புணர்வு பேரணி

நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியும், மக்கள் தொகையும் பெருகிவரும் நிலையில் குற்றங்களும் அதிகரித்து கொண்டே உள்ளது. பெரும்பாலும் தற்போது குற்றங்கள் இணையவழியில் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. இணைய வழி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களை இணைய வழி குற்றங்கள் என வகைப்படுத்தப்படுகிறது. இம்மாதிரியான குற்றங்கள் இணையவழியில் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது.

பெரும்பாலும் இவ்விதமான குற்றங்கள் மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப பணங்களை அழிப்பதாக கூறியும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இம்மாதிரியான குற்றங்கள் பெருநகரங்களிலும் கிராமங்களிலும் பெரும்பாலும் தற்போது நடைபெற்று வருகிறது. இணைய வழி நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கும் குற்றங்களிலிருந்து விரைவில் தீர்வு காணும் வகையில் நாட்டில் சைபர் கிரைம் குற்றங்களை பதிவு செய்து உரிய தீர்வு காணும் வகையில் www.cybercrime.gov.in சைபர் கிரைம் என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. மேலும் இலவச சைபர் கிரைம் குற்றப்பதிவு அலைபேசி எண்ணாக 1930 எண் செயல்பட்டு வருகிறது.

இதனை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையிலும் இணையவழிகுற்றங்களிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் மற்றும் கே.பி.ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் சைபர் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி சூலூரில் நடத்தப்பட்டது.

பேரணியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கொடியசைத்து துவங்கி வைத்தார். சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே துவங்கிய பேரணி திருச்சி சாலை வழியாக காவல் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்கள் வழங்கி சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

Tags:    

Similar News