சூலூரில் 350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது

கோவையில் சந்தேகத்திற்கு உரிய வகையில் நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-07-10 12:45 GMT

குட்கா பதுக்கல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த, கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக சூலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சூலூர் காவ‌ல் துறை‌யின‌ர் நீலாம்பூர் அருகே வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு உரிய வகையில்  நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தலராம் (31) மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (22) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 2 இலட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சூலூர் காவல்துறையினருக்கு கிடைத்த மற்றொரு ரகசிய தகவலின் அடிப்படையில் போட் ஹவுஸ் அருகே சென்று சோதனையை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த முட்புதரில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டாலின்பால் (34) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ புகையிலை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரது உத்தரவின்பேரில், கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 113 நபர்கள் மீது 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து சுமார் 3107.87 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News