கோவை தங்கும் விடுதியில் காதலி கொலை: காதலன் கைது

விடுதியில் தங்கி இருந்த போது நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் சரவணனுக்கும், கீதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2024-09-15 04:45 GMT

கைதான சரவணன்

கோவை மாவட்டம், சின்னியம் பாளையம் பகுதியில் ஒரு தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு இளம் பெண்ணுடன் இளைஞரும் வந்து தங்கினார். பின்னர் நேற்று அதிகாலை வாலிபர் மட்டும் வேகமாக விடுதியை காலி செய்து விட்டு, வெளியேறியதை கண்டு விடுதி ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால் அந்த அறைக்கு சென்று எட்டிப் பார்த்தனர். அங்கு அவருடன் தங்கி இருந்த இளம்பெண் முகத்தில் காயமடைந்த நிலையில், இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பீளமேடு காவல் நிலையத்திற்கு விடுதி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். பீளமேடு காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரித்தனர். விசாரணையில் அவர் சின்னியம்பாளையம் ஆர்.ஜி புதூரை சேர்ந்த சரவணன் என தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் விடுதியில், இறந்து கிடந்த பெண் கோவை எஸ்.எஸ் குளம் அருகே கள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த கீதா என்பதும் கோவை அவிநாசி சாலையில் ஒரு மகளிர் விடுதியில் தங்கி இருந்து ஜிம்மில் பயிற்சியாளராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

கீதாவும் சரவணனும், காதலித்து வந்து உள்ளனர். வீட்டுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் திருமணத்தை இதுவரை பதிவு செய்யவில்லை.  கீதாவும், சரவணனும் அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் அவர்களது திருமணத்தை குடும்பத்தினர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

இருந்தாலும் கீதாவும், சரவணனும் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதேபோல் அறை எடுத்து விடுதியில் தங்கி இருந்த போது சரவணனுக்கும், கீதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கீதாவின் நடத்தையில் சரவணன் சந்தேகம் அடைந்து உள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சரவணன், கீதாவின் முகத்தில் கையால் குத்தி தலையில் சுவற்றில் மோத செய்ததாக தெரிகிறது. இதில் பரிதாபமாக கீதா இறந்து உள்ளார். சரவணனிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் தங்கும் விடுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News