சிறுமியை பாலியல் வன்கொடுமை: 20 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

வாலிபர் சிறுமியிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

Update: 2021-08-30 09:30 GMT

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட அஜய்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள மில் வேலைக்கு சென்று வருகிறார். கடந்த சில தினங்கள் முன்பு பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த அஜய் என்ற 20 வயது வாலிபரை சந்தித்துள்ளார். பின்னர் சிறுமி வாலிபரின் தொலைபேசி எண்ணை வாங்கி, வாலிபரை தொடர்பு கொண்டு பேசி கொண்டு வந்துள்ளனர். இருவரும் முகநூலிலும் பேசி பழகி வந்துள்ளனர். இதையடுத்து வாலிபர் சிறுமியிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதன்படி அச்சிறுமி வாலிபருடன் சென்றுள்ளார்.

கோட்டூர் காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். செல்போன் சிக்னல் அடிப்படையில் அருப்புக்கோட்டையில் இருந்த இருவரையும் காவல் துறையினர் மீட்டு வந்தனர். பின்னர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் வாலிபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News