7 சவரன் நகைக்காக படுகொலை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொள்ளையடித்த நகைகளை பல தவணைகளில் அடமானம் வைத்து பணம் பெற்று, கடன்களை அடைத்தது தெரியவந்தது.;

Update: 2021-12-27 13:45 GMT

குண்டு வெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் அருக்கானி என்கிற அருகாத்தாள். கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி வீட்டில் தனியாக இருந்த இவரை படுகொலை செய்த மர்ம நபர், அவரது தாலிக்கொடு உட்பட 7 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் அருக்கானியின் தங்கை மகனான ரவிபிரகாஷ் என்பவர் மீது சந்தேகம் எழுந்ததால் போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணினி சர்வீஸ் செய்து வந்த ரவிபிரகாஷ், கடன் தொல்லையால் சிக்கித்தவித்து வந்த நிலையில், பலரிடம் கடன் வாங்கியிருந்தது தெரியவந்தது.

கடனை திரும்ப தர முடியாமல் தவித்து வந்த ரவிபிரகாஷ், அருக்கானியின் வீட்டிற்கு சென்ற போது, அவரை போர்வையால் இறுக்கி கொன்றுவிட்டு நகைகளுடன் தப்பிச்சென்றது தெரியவந்தது. மேலும், அந்நகைகளை யாருக்கும் சந்தேகம் வராமல் பல தவணைகளில் அடமானம் வைத்து பணம் பெற்று, கடன்களை அடைத்ததும், தாலிக்கொடியில் இருந்த தாலியை மட்டும் பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியதும் தெரியவந்தது. இந்த வழக்கு கோவையில் உள்ள குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ரவிப்பிரகாஷுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News